மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென் மாவட்டங்களில் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக, புகழ் பெற்ற இந்த அருவிப் பகுதியில் உள்ள பூதநாராயணசாமி கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதனிடையே, கடந்த சில நாள்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை, பச்சக்கூமாச்சி மலை, மணலார், மேல்மணலார், இரவங்கல்லார், வெண்ணியாறு, மகாராஜாமெட்டு ஆகிய பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து இங்குள்ள 7 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இந்த அணைகள், சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகள் என்பதால், தற்போது அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இங்கு குளிக்க ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை ஊழியர் ஒருவர் கூறும் போது, வரும் காலங்களில் அருவியில் மேலும் நீர்வரத்து அதிகரித்தால், அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் குளிக்கத் தடை விதிக்கப்படும் என்றார்.