அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் சட்டவிரோத கட்டடங்கள் அதிகரித்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.ராமநாதன் தாக்கல் செய்த மனுவில், தனசேகரன் என்பவர் நெல்லியேந்தல் கண்மாய் அருகே வீட்டு மனைகளை விற்பனை செய்து வந்தார். அவர் கண்மாய்க் கரையை, மனைகளுக்கான சாலையாகப் பயன்படுத்தி வந்துள்ளார். இது நாளடைவில் கண்மாயை ஆக்கிரமிக்க வழிவகுக்கும் என்பதால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்மாய்க் கரையை எதிர் மனுதாரர் சாலையாகப் பயன்படுத்தியதை உறுதி செய்துள்ளனர். இதுபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வரும்போது தான் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுவது அதிகரித்து வருவது தெரிகிறது. இந்த வழக்கின் எதிர் மனுதாரர் போன்று தவறு செய்பவர்களிடம் இருந்து அதிகாரிகளுக்கு தேவையான சலுகைகள் கிடைக்கின்றன. இதன் காரணமாக மதுரையிலும் சட்டவிரோத கட்டடங்கள் அதிகரித்து வருகிறது. இது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் தோல்வி மற்றும் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அபராதம்: மேலும், ரூ.25 லட்சம் அபராதமாக செலுத்த தயாராக உள்ளேன் என்று தனசேகரன் தெரிவித்துள்ளார். அதில் முன்பணமாக செலுத்த உள்ள ரூ.5 லட்சத்தை கண்மாயின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட வேண்டும்.