நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜிநாமா செய்த ஆசிரியை தனது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வைரபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை சபரிமாலா, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை கொண்டுவர வலியுறுத்தியும் பள்ளி வளாகம் முன் கடந்த 6-ஆம் தேதி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸார், போராட்டத்துக்கு அனுமதிக்காத நிலையில், சபரிமாலா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணனிடம் தனது பணியை ராஜிநாமா செய்வதாக கூறி, சபரிமாலா கடிதத்தை அளித்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திண்டிவனத்தை அடுத்துள்ள ஜக்காம்பேட்டையில் உள்ள தனது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே. பாலகிருஷ்ணன், ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் கலியன் ஆகியோரும் சந்தித்தனர்.
திமுக எம்எல்ஏக்கள் கே.எஸ்.மஸ்தான் (செஞ்சி), மாசிலாமணி (மயிலம்), சீத்தாபதிசொக்கலிங்கம் (திண்டிவனம்), திமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் ரமணன் உள்ளிட்டோர் மாலையில் சபரிமாலாவை சந்தித்துப் பேசினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சேரன் பழச்சாறு கொடுத்து, சபரிமாலாவின் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.