சென்னை: நடிகர் கமல்ஹாசன் ‛ஆடம்பர முட்டாள்' என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடிகர் கமல், தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தும், விமர்சித்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். இதனை அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், அதிரடி கருத்துக்களை அள்ளி வீசும் சுப்பரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்க பதிவில் நடிகர் கமல்ஹாசனை விமர்சனம் செய்துள்ளார்.
‛ஆடம்பர பகட்டு முட்டாள் கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக எனக்கு தெரியவந்துள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.
I hear pompous idiot Kamalahasan is joining CPM! — Subramanian Swamy (@Swamy39) September 10, 2017
கமல் கோழிக்கோட்டில் நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் செமினாரில் கலந்துகொள்ள உள்ள நிலையில், அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கமல், சில தினங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கமல் டுவிட்டரில் மிகத் தீவிரமாக அரசியல் கருத்துக்களைக் கூறிக்கொண்டுள்ளார்.
இவர் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தை, படிப்பறிவில்லாதவர், அரசியலுக்கு தகுதியற்றவர், ஒரு ஃபோர் டுவென்டி என கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.