பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 12) நடைபெறுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில்
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 12) நடைபெறுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) சார்பில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ளவும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று முதலே...: வெளியூர்களில் இருப்பவர்கள் திங்கள்கிழமை இரவே வந்து சென்னையில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வானகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், பூந்தமல்லி, நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தங்குவதற்கு அறைகளும், வீடுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு பேருந்துகளை மாவட்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அமர்த்தியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சுமார் 2 முதல் 3 பேருந்துகளில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அழைத்து வரப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தீர்மானங்கள்: சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டிடிவி தினகரனின் நியமனமும், அவர் வெளியிட்ட அறிவிப்புகளும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. மேலும், சசிகலா நீக்கம் என்று இல்லாமல் புதிய பொதுச் செயலாளர் அல்லது கட்சியை நிர்வகிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் அளிப்பது போன்றவற்றுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்சியை வழிநடத்துவதற்கான குழுவுக்கு ஒப்புதல் பெறுவது, அந்தக் குழுவுக்கு நிர்வாகிகள் பெயர்களை அறிவிப்பது போன்றவை குறித்தும் தீர்மானங்கள் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
செல்லுமா, செல்லாதா: முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்ஏ., வெற்றிவேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால், பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், வழக்கால் கூட்டத்துக்கு தடை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், கூட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் ஏற்கெனவே எச்சரித்துள்ளார். இதனால், முதல்வர் பழனிசாமி கூட்டியுள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடும் போலீஸ் பாதுகாப்பு: முதல்வர் அறிவித்துள்ள கூட்டம் ஒருபுறம், அதற்கு செல்லக் கூடாது என்ற தினகரனின் தடை மறுபுறம் என இந்தக் கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூட்டத்தில் பிரச்னைகள் ஏதும் வந்து விடக் கூடாது என்பதால் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த காவல் துறை முடிவு செய்துள்ளது. சாலை போக்குவரத்தில் யாரும் தடை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக கோயம்பேடு பகுதியில் இருந்து கூட்டம் நடைபெறும் வானகரம் வரை சாலை முழுவதும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனால், கூட்டம் தொடங்கி முடியும் வரை பெரும் பரபரப்பு நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com