தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் என்ற பிரேமலதா விஜயகாந்தின் பேச்சு சிறந்த நகைச்சுவை என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்தார்.
பழனியில் நடைபெற்ற அதிமுக ஒன்றிய பொருளாளர் அப்பாஸ்மந்திரி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர், திமுகவுக்கு வந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என பேசியிருப்பது அவர் கட்சிக்கு, தமிழக மக்களிடையே போதிய ஆதரவு இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டது போல் உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது சிறந்த நகைச்சுவை.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற மாணவர்களின் நிலைப்பாடே எங்களின் நிலைப்பாடு. உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா என தற்போது சொல்ல இயலாது. தேர்தல் வரும் போது கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் கூட்டப்பட்டு அதில் எடுக்கும் முடிவைப் பொறுத்து கூட்டணி அமையும்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்புத்துறையைச் சேர்ந்தவர். அவர் ஆளும்கட்சி குறித்து விமர்சனம் செய்வது அவரது உரிமை. ஆனால் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சில நேரம் உண்மைக்கு புறம்பாகவும், ஏற்புடையதாகவும் இல்லை. விரைவில் அனைத்து எம்எல்ஏ.க்கள் பங்கேற்கும் கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்களும் பங்கேற்பார்கள். எங்களுக்கு சட்டப் பேரவையில் பெரும்பான்மை உள்ளது என்றார்.