சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனுதாக்கல் செய்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பிறகு கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது, இன்று சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
அதில் பொதுச் செயலர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதே நேரத்தில் இந்த பொதுக்குழு செல்லாது என்று தெரிவித்த அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலரான டிடிவி தினகரன், ஆட்சி மீதான நம்பிக்கை இழப்பு கடிதம் தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் ஆளுநர் உரிய முடிவு எடுக்கா விட்டால், இந்த ஆட்சியினை அகற்றத் தயங்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.
திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் ஆளுநரைச் சந்தித்து, பெரும்பான்மை ஆதரவை இழந்த இந்த ஆட்சியினை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் கொடுத்திருந்தார்.
அப்பொழுது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தினை அணுகி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று காலை மனுதாக்கல் செய்துள்ளார்.