சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் ரேஷன் கடையில் விநியோகிக்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில், குடும்பத் தலைவரின் விவரம் இடம்பெறும் இடத்தில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிப்பதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, ரேஷன் கார்டுக்கு பதில் ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்மார்டு கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்னையில் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு படிப்படியாக அனுப்பப்பட்டு வருகிறது.
அவ்வாறு விநியோகிக்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட் கார்டுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. குடும்பத்தலைவர் புகைப்படங்கள் மாறி வருவதாகவும், பெயர் மற்றும் முகவரியில் குளறுபடிகள் இருப்பதாகவும், பிறந்த தேதி மாறி உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் கிராமம், கோமாளிவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பெரியசாமி என்பவரது மனைவி சரோஜாவுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் குடும்பத் தலைவர் விவரம் குறிக்கும் இடத்தில், சரோஜாவின் புகைப்படத்துக்குப் பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ரேஷன் கடை ஊழியர்களிடம் முறையிட்ட போது, அவர்கள் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் புகைப்படம் கொடுத்து, மாற்றிக்கொள்ளலாம் என்றும், அட்டையில் காஜல் அகர்வாலின் படம் இருந்தாலும் ரேசன் பொருள் வழங்கப்படும் என்று ரேசன் கடையில் இருப்பவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
போலி ரேஷன்கார்டுகளை தடுக்கவே புகைப்பட அடையாளத்துடன் கூடிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அரசால் வழங்கப்பட்டுகின்றன. இந்த நிலையில் அட்டைதாரர்களின் பெயர் மற்றும் புகைபடங்கள் மாற்றி அச்சிடப்படுவதை பார்க்கும் போது இந்த பணிகளை மேற்பார்வையிடும் அரசு ஊழியர்கள் எவ்வளவு மெத்தனமாக அலட்சியமாக செயல்படுகிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.