சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு வாக்கெடுப்பு: ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்று கோரி திமுக செயல் தலைவர்
சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு வாக்கெடுப்பு: ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்று கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கிய அணிகள் ஒன்றாக இணைந்ததை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆக.22 ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்தனர். தமிழக எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதோடு, உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனக்கூறி மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு விவரம்: சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 உறுப்பினர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் தற்போது 233 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சட்டப்பேரவைத் தலைவரைத் தவிர்த்து, அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப்பினர்கள் தேவை. ஆனால், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு 113 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் என மொத்தம் 119 பேர் இந்த ஆட்சிக்கு எதிராக உள்ளனர்.
எனவே, தற்போதுள்ள அரசு தனது பெரும்பான்மையை இழந்து விட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். ஆளுநர் இந்த விவகாரத்தில் ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார். இந்த காலதாமதம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். எனவே, தமிழக ஆளுநர் உடனடியாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட நீதிமன்றம்அறிவுறுத்த வேண்டும். மேலும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் பொதுப் பார்வையாளர் முன்னிலையில் நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய வழக்கு அக்டோபர் 10-க்கு ஒத்திவைப்பு: இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, அந்த வழக்கை வரும் அக்.10-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com