உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் நவோதயா பள்ளிகளுக்கான தடையில்லாச் சான்றை 8 வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவாக 1986-இல் புதிய கல்விக் கொள்கையில் நவோதயா பள்ளிகளுக்கான பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் நவோதயா பள்ளிகளில் ஹிந்தி திணிக்கப்படுகிறது என்கிற கருத்தின் அடிப்படையில் தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்து வருகிறது.
நவோதயா பள்ளித் திட்டத்தின்படி 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழில் தான் பாடம் கற்பிக்கப்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ் மொழி விருப்பப் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது. நவோதயா பள்ளிகளைப் பொருத்தவரை மும்மொழிக்காள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்கினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.20 கோடி ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிதமிழகத்துக்கு வரவேண்டிய ரூ. 640 கோடி வராமல் தடுக்கப்பட்டு வருகிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கிராமப்புறத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவது மிகமிக அவசியமாகும். எனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளை உடனடியாகத் தொடங்க தமிழக அரசு உய நடவடிக்கை எடுக்க வேண்டும்.