அண்ணா பிறந்த நாள் மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை (செப்.15) முதல் சலுகை விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், ஆய்வுகள், திட்டப் பணிகள் போன்றவற்றின் மூலமாக நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல்களை அனைத்து மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் கிடைத்துப் பயன் பெற வேண்டுமென்ற நோக்கத்தில் சிறப்பு விற்பனை நடைபெறவுள்ளது. மறைந்த முதல்வர் அண்ணா பிறந்த நாள் மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 15 -ஆம் தேதி முதல் வரும் அக்டோபர் 15 -ஆம் தேதி வரையில், சிறப்பு நூல் விற்பனை நடைபெறவுள்ளது. இந்த நூல்கள் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.