நாகை அருகே காரில் 10 கிலோ மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்திச் சென்ற 3 பேரை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வரப்பட்டு, நாகை வழியாக சென்னைக்கு கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி, மதுரை, தூத்துக்குடியைச் சேர்ந்த மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு போலீஸார் நாகை வழியாக வெளியூர்களுக்கு செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது புதன்கிழமை அதிகாலையில் வேளாங்கண்ணி பகுதியிலிருந்து வேகமாக வந்த காரை வாஞ்சூரில் உள்ள காரைக்கால் சோதனைச் சாவடியில் நிறுத்தி விசாரித்ததில், காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். இதையடுத்து காரை சோதனையிட்டதில், ஒரு பையில் 10.700 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதும், அவற்றை சென்னைக்கு கொண்டு செல்வதும் தெரிய வந்தது.
பின்னர் காரில் இருந்த 3 பேரும் நாகையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள், வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடியைச் சேர்ந்த மகாலிங்கம் (53), அவரது மனைவி ராதாமணி (44), புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த ரகுபாலன் (35) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு போலீஸார், தங்கக் கட்டிகள் கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.