நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் முறைகேடுகளைத் தடுக்கக் கோரிய வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து ,சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் இருபுறமும் சரக்கு லாரிகள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கட்டணம் செலுத்தி பயணிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கான வசதிகள் இல்லை. எனவே, வசதிகளை மேம்படுத்தவும், பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையின் இருபுறமும் சரக்கு லாரிகளை நிறுத்துவதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று, மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பழனிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையின் தலைமைப் பொதுமேலாளர் நேரில் ஆஜராகி, சுங்கச்சாவடிகளில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் செல்வதற்கு என தனி வழி உள்ளது என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் கழிப்பறை வசதியோ, ஆம்புலன்ஸ் செல்வதற்கு என தனி வழியோ இல்லை. மேலும், பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ரவுடிகளாகவும், சமூகவிரோதிகளாகவும் உள்ளனர். சுங்கச்சாவடிகளை ஒப்பந்தம் வழங்கிய நிறுவனங்களிடம் பராமரிப்பு குறைபாடு குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை? என்றனர்.
இதற்கு அவர், எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுப்பதாக உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.