சென்னை: முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த 19 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் கொடுத்த காலக்கெடு இன்று முடிவடையும் நிலையில், முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஆளுநரிடம் மனு கொடுத்தது குறித்து 19 எம்எல்ஏக்களும் செப்டம்பர் 14ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தினகரன் அணி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விதித்த காலக்கெடு இன்று முடியும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகப் பார்க்கப்படுகிறது.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காத எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே விவகாரத்தில் சபாநாயகருடன் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அரசுக் கொறடா முன்னதாக ஆலோசித்தனர்.
மேலும், தினகரன் ஆதரவு எம்எல்ஏவாக இருந்த ஜக்கையன் மட்டும் இன்று காலை சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.