பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான அகில இந்திய அளவிலான கேரம் போட்டி, சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான சமுதாயநலக் கூடத்தில் புதன்கிழமை (செப்.13) தொடங்கியது.
இந்தப் போட்டியில் மும்பை, சென்னை, உத்தரப் பிரதேசம், பிகார், ஒடிஸா, அஸ்ஸாம் உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
போட்டியைத் தொடங்கி வைத்து பிஎஸ்என்எல் சென்னை தலைமைப் பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தப் போட்டி வரும் 16 -ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 128 வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், கேரம் சங்க மேலாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆண், பெண் இருபாலருக்கும் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகள் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து சனிக்கிழமை (செப்.16) நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில், வருமான வரித் துறை தலைமை ஆணையர் என்.சங்கரன், அர்ஜுனா விருது பெற்றுள்ள மரியா இருதயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கவுள்ளனர் என்றார்.
தொடக்க விழாவில், இந்தியன் வங்கி பொது மேலாளர் ஆர்.மணிமாறன், தமிழ்நாடு கேரம் சங்கத்தின் பொது மேலாளர் ஜி.விஜயராஜ், 1995 -இல் கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வட்டார விளையாட்டு மற்றும் கலாசார வாரியம் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது.