சென்னை: நீதிமன்றத் தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்கங்களுக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையும் விடுத்தது.
போராட்டத்தால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறி, தமிழக அரசுக்கு இது தொடர்பாக சில கேள்விகளையும் எழுப்பியது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, ஆசிரியர்களின் போராட்டத்தின் போது 33,487 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.
மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள், பணிக்கு வராத நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாகக் கருத்தில் கொள்ளப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் ரூ.75 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அதிக சம்பளம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே வழங்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.
இவற்றை கேட்டறிந்த நீதிபதி கிருபாகரன், அரசுப் பள்ளியில் உங்கள் குழந்தைகள் படித்தால், நீங்கள் போராட்டத்தில் ஈடுபடுவீர்களா? அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் எதிரானது அல்ல. ஆனால், ஆசிரியர்களின் போராட்டத்தில்தான் கவனம் கொள்ள வேண்டும். தற்போது இந்த போராட்டமும் சமூக, மதம் மற்றும் மொழிவாரியாக மாற்றம் பெற்றுள்ளது என்று கூறினார். மேலும் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.