நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், கடந்த மே மாதம் மோகனூர் அருகே உள்ள பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து சுப்பிரமணியன் எழுதிய கடிதத்தை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான பழனியப்பனின் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். அப்போது பழனியப்பன் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் பழனியப்பன் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள எம்.எல்.ஏ. பழனியப்பன் டிடிவி தினகரன் அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.