சென்னை: வரும் 20-ஆம் தேதி வரை சட்டப்பேரவையில் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை: விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதாகக் கூறி டிடிவி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அந்த மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் , ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.
இந்த நிலையில் சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினும் பிற எதிர்கட்சிகளும் சேர்ந்து ஆளுநரிடம் இதே விவகாரம் தொடர்பாக கடிதம் கொடுத்தனர். ஆனால் இந்த கடிதம் குறித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், நேற்று முன்தினம் ஸ்டாலின் சென்னை உயர் நீதின்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அதில் அவர் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சட்டப்பேரவையினை உடனடியாகக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ரிட் மனு தாக்கல் செய்தார்.
இன்று அந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.ராமன் எழுந்து, இதே போன்ற கோரிக்கையினை வலியுறுத்தி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
மனுவினை விசாரித்த நீதிபதி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனிடம், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சட்டப்பேரவை செயலரிடம் ஆலோசித்து தகவல் தெரிவிக்குமாறு உத்தர விட்டனர். இதற்காக இன்று மாலை வரை அவகாசமும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் நீதிமன்றம் கூடியதும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் அரசின் பதிலை சமர்ப்பித்தார். அதில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கை துவங்கி விட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சட்டசபையின் மரபுப்படி சபாநாயகர் எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று ம் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதே சமயம் இதே போன்ற வேண்டுகோளுடன் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவுடன் இந்த மனுவினை இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற எதிர் மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் தலைமை வழக்கறிஞர் வேண்டுகோள் வைத்தார்.
இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தரப்பு மனு மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இருவரும் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம், இரு தரப்பு வேண்டுகோளினையும் ஏற்று, வரும் 20-ஆம் தேதி வரை சட்டப்பேரவையில் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை: விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.