2 மணி நேரத்தில் முடிவடைந்த பொங்கல் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு

பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 12 ஆம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய 2 மணி நேரத்தில் முடிவடைந்தது.

பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 12 ஆம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய 2 மணி நேரத்தில் முடிவடைந்தது.

2018 ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதற்காக ரயில்வே சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
120 நாட்களுக்கு முன்பாகவே பயணச் சீட்டு முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளதால் , ஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு வெள்ளிக்கிழமை (செப். 15) முதல் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இணையதளத்தில் எளிதாக பயணச்சீட்டு செய்யும் வசதி இருந்தாலும் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலைய கவுன்ட்டர்களில் ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே காத்திருந்து பயணச்சீட்டை முன்பதிவு செய்தனர். பெண்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்ட்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியால் டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
2 மணி நேரம்: ஜனவரி 12 ஆம் தேதி பயணத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு காலை 10 மணிக்குள்ளாகவே முடிந்துவிட்டது. இப்போது தென் மாவட்ட ரயில்களில் தோராயமாக படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு 235 என்ற அளவில் காத்திருப்பு பட்டியல் உள்ளது. மேலும் கோவை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு காத்திருப்பு பட்டியல் 150} என்ற அளவில் உள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, பொதிகை, கன்னியாகுமரி விரைவு ரயில்களில் காத்திருப்பு பட்டியல் 250}ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதேபோல கோவை வழியாகச் செல்லும் நீலகிரி, சேரன், ஏற்காடு, கோவை இன்டர்சிட்டி ரயில்களிலும் இதே நிலைதான் உள்ளது.
மேலும், ஜனவரி 13 ஆம் தேதி பயணம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமை (செப். 16) முன்பதிவு செய்யலாம் என்றும், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு செப்18 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலானவர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதால் அவர்களுக்கு எளிமையாக முன்பதிவு வசதி கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல் நாள்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். அனைத்து விரைவு ரயில்களிலும் பொங்கலை முன்னிட்டு ஜன.12 ஆம் தேதிக்கான முன் பதிவு முடிந்துவிட்டது. ஜன 11}ஆம் தேதியில் பெரும்பாலான ரயில்களில் இடங்கள் காலியாகத்தான் இருக்கின்றன. இப்போது, 70 சதவீதம் பேர் இணையதளம் வழியாக பயணச் சீட்டை முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நிமிடத்துக்கு 15 ஆயிரம் பயணச்சீட்டு முன்பதிவு
செய்யும் வசதி உள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். மேலும், பொங்கல் பண்டிக்கைகான சிறப்பு கட்டண ரயில் மற்றும் சுவிதா சிறப்பு ரயில்கள் பண்டிகை நெருங்கி வரும்போது அறிவிக்கப்படும். அந்த வாய்ப்பை இப்போது முன்பதிவு செய்ய இயலாதவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணி சுவாமிநாதன் கூறியதாவது:
இணையதள டிக்கெட் முன்பதிவு அதிகரித்ததால், கவுன்ட் டர்களில் காத்திருப்போருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. ஒரே நேரத்தில் இணையதளத்திலும், கவுன்ட்டர்களிலும் முன்பதிவு தொடங்குவதால் அடுத்த சில நிமிஷங்களில் டிக்கெட் தீர்ந்துவிடுகிறது. கவுன்ட்டர்களில் வந்து டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, கவுன்ட்டர் திறந்து அடுத்த 10 நிமிடங்களுக்குப் பிறகு, இணையதள முன்பதிவு தொடங்கினால், கவுன்ட்டர்களில் காத்திருப்பவர்களும் பயனடை யலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com