அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து, மு. தம்பிதுரை விடுவிக்கப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக கொள்கைப்பரப்புச் செயலாளராக சட்டப்பேரவை உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுவதாகவும், இப்பொறுப்பில் இருந்து மு.தம்பிதுரை விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தினகரன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக எம்.தனபாலகிருஷ்ணன் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கழகப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் என செயல்பட்டுவரும் மாவட்டக் கழக அமைப்பு, நாகப்பட்டினம் வடக்கு, நாகப்பட்டினம் தெற்கு என இரண்டு மாவட்டக் கழகங்களாக பிரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் வடக்கு மாவட்டத்தில் சீர்காழி தனி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளும், நாகப்பட்டினம் தெற்கு மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேலூர் தனி, வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளும் அடங்கும் என்றும், நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக எஸ்.செந்தமிழனும், தெற்கு மாவட்டக் கழக செயலாளராக ஆர். சந்திரமோகனும் நியமிக்கப்படுவதாகவும், நாகப்பட்டினம் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து, ஓ.எஸ்.மணியன் விடுவிக்கப்படுதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
எனவே, கழக உடன்பிறப்புகள் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.