அதிமுக அணிகளுக்கு இடையே தேர்தல் நடத்தி இரட்டை இலைச் சின்னத்தை ஒப்படைக்கக் கோரும் மனுவில், சின்னத்தை முடிவு செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவை என்று தேர்தல் ஆணையத்திடம் தகவல் பெற்றுத் தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அணிகளின் நிர்வாகிகளை ஒரே இடத்தில் கூட்டி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் தேர்தல் நடத்தி வெற்றி பெறும் அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதில் தருமாறு வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா, தினகரன் ஆகியோர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகவில்லை. தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர், இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி அதிமுகவின் இரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இரு அணிகள் தான் காலஅவகாசம் கேட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் சென்றடைந்துள்ளது. ஆனால் அவர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கு, தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமைக்கு (செப்.15) ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி இரு அணிகள் சார்பிலும் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எத்தனை நாளில் முடிவெடுக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.