மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர்களில் சசிகலா உள்ளார்: எச். ராஜா 

மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர்களில் சசிகலா இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர்களில் சசிகலா உள்ளார்: எச். ராஜா 

மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர்களில் சசிகலா இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

அவர் இன்று புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களை உடனடியாக வெளியேற்ற இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய அளவில் ஊழல் புரிந்துள்ளது தெரிகிறது. தனியார் மருத்துவக்கல்லூரிகளும் நீட் அடிப்படையில் தான் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியும் அதை கடைப்பிடிக்காததால் மத்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊழல் அரசு நடைபெறுவதால் இது  போன்று நிகழ்ந்து உள்ளது. மாணவர் நலனில் புதுச்சேரி அரசுக்கு அக்கறை இல்லை.

யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது. இதனை உணர்ந்து முதல்வர் நாராயணசாமி அரசு  ஆளுநருடன் இணக்கமாக செயல்பட வேண்டும்.  மத்திய அரசின் திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தாமல் ஆளுநருடன் மோதல் போக்குடன் செயல்படுவதால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 

காங். ஆட்சியில் தான் தினகரன் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு
புதுச்சேரியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சிகளில் தான் தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தங்க வைத்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க தினகரன் ஆதரவு உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் அரசுகள் ஆதரவளிக்கின்றன.

பணம் இருந்தால் சொகுசி விடுதியும் சிறைச்சாலையாகும், சிறைச்சாலையும் விடுதியாகும். தமிழகத்தில் நடைபெறும் உட்கட்சி பூசலை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் ஆசிரியர் போராட்டங்களை தூண்டி விடுகின்றன.

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் போராட்டம் குறித்து நீதிபதி கருத்தை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது.

சசிகலா அதீத அதிகார பசியின் காரணமாகவே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர்களில் சசிகலா உள்ளார். மன்னார்குடி குடும்பத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள். 20ஆம் தேதி இதற்கான முடிவு வரும் என எதிர் பார்க்கின்றேன். கமலஹாசன் அரசியல் கட்சி துவங்குவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினகரனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நோக்கில் இருக்கின்றார். அதிமுகவின் எந்த ஒரு செயலிலும் பாஜக இல்லை. அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கின்றதோ அது மாநிலத்தில் செயல்படுத்தப்படும். புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே குறிப்பு கொடுத்துள்ளது. அதை மாநில அரசு செயல்படுத்தும். புதுவையில் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நாராயணசாமி திணிக்கப்பட்டார்.

மாற்று அரசு வேண்டும் என்றால் காங்கிரஸில் பிளவு ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட்டால் அதற்கு காரணம் பாஜக இல்லை  என்றார் ராஜா. மாநில தலைவர் வி.சாமிநாதன், மாநில பொதுச் செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com