மருத்துவ மாணவர்களின் நிலைக்கு அதிகார வர்க்கம், தனியார் கல்லூரி நிர்வாகங்களே கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும்: ஆளுநர் கிரண்பேடி

மருத்துவ மாணவர்களின் நிலைக்கு அதிகார வர்க்கம், தனியார் கல்லூரி நிர்வாகங்களே கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
மருத்துவ மாணவர்களின் நிலைக்கு அதிகார வர்க்கம், தனியார் கல்லூரி நிர்வாகங்களே கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும்: ஆளுநர் கிரண்பேடி

மருத்துவ மாணவர்களின் நிலைக்கு அதிகார வர்க்கம், தனியார் கல்லூரி நிர்வாகங்களே கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுவையில் கடந்த ஆண்டு நிகர்நிலைப் பல்கலை, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விதிகளை மீறி எம்பிபிஎஸ் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டதாக 770 மாணவர்கள் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் எம்சிஐ ரத்து செய்து உத்தரவிட்டது. இது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் எதிர்காலம் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லாஸ்பேட்டையில் தூய்மை இந்தியா திட்டத்தின் 4-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பின் ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள், விதிகளை மீறி புதுவையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதால் எம்சிஐ விசாரணை செய்து அவர்களது சேர்க்கையை ரத்து செய்துள்ளது. இதனால் அப்பாவி மாணவர்கள் பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலைக்கு அதிகார வர்க்கமும், தனியார் கல்லூரி நிர்வாகங்களுமே கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆளுநர் மாளிகையில் சுகாதாரத்துறை, சென்டாக் அதிகாரிகள், தனியார் கல்லூரிகள் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சென்டாக் மூலம் நீட் தகுதியின்படி சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அதை மீறி முறைகேடாக மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர். பெற்றோரும் தங்கள் அறியாமையால் இச்செயலை செய்துள்ளார்கள் என்றாலும் சட்டத்துக்கு விதிமுறைகளே முக்கியம். புதுவை நிரந்தர சேர்க்கை குழுத்தலைவர் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தாக்கல் செய்த அறிக்கையில் மாணவர் சேர்க்கையில் உள்ள குறைபாடுகள் குறித்து கூறியுள்ளார். ஆனால் அதை சரிசெய்யாமல்  முறைகேடு நடந்துள்ளது தெளிவாக புலனாகிறது.

அவரது கருத்துக்கள் ஏற்கப்பட்டிருந்தால் இந்நிலை வந்திருக்காது. மாணவர் சேர்க்கையை மேற்பார்வையிட வேண்டிய சுகாதாரத் துறை, சென்டாக் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்பட்டனர். தனியார் கல்லூரி நிர்வாகங்களும் விதிகளை மீறி செயல்பட்டுள்ளன. இப்பிரச்னை தொடர்பாக தலைமைச்செயலரிடம் அறிக்கை கோரியும் இன்னும் வரவில்லை.

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது. நேர்மையான, வெளிப்படையான செயல்பாடுகள் இல்லாததாலும், அதிகார வர்க்கம், அரசின் செயல்பாடுகளால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டில் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக தான் சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கெளடு நியமிக்கப்பட்டு மருத்துவ சேர்க்கை முறையாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைவரும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலனை காக்க வேண்டும் என கிரண்பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com