சென்னை: அடுத்த வாரத்துக்குள் முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எங்கள் அணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது.
பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக ஆதரவு அளித்த எங்கள் அணியின் எம்எல்ஏக்களையே தகுதி நீக்கம் செய்ய அவர் முயன்றார் என்றால், அவரை இறைவனும், நீதி தேவதையும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
மேலும், திமுகவுடன் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது குறித்த கேள்விக்கு, திமுக தொடர்ந்த வழக்குடன் சேர்த்து மனு தாக்கல் செய்ததில் என்ன தவறு? திமுக தான் எங்களின் பிரதான எதிர்க்கட்சி. திமுகவுடன் எங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி கிடையாது என்று பதிலளித்தார்.