அண்ணாவின் கொள்கைகளைப் பரப்புவது அவசியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: தமிழகத்தில் பல மாதங்களாகவே ஆளுங்கட்சியில் அணிகள் சண்டை பெரிதாக இருக்கிறது. தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனரோ, அப்போதே அவர்களை அமைச்சர்கள் அழைத்து பேசி இருக்க வேண்டும். நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வததாகக் கூறி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்த்திருக்க வேண்டும்.
எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், தொடர்புடையவர்களை அண்ணா அழைத்துப் பேசி அல்லது அவரே நேரில் சென்று பேசி அவர்களை ஒத்துக்கொள்ளச் செய்து விடுவார்.
இந்த அணுகுமுறை இவர்களிடம் இல்லை. அண்ணா எந்தக் கொள்கைக்காகக் கட்சியைத் தொடங்கி, ஆட்சிக்கு வந்தாரோ அதைப் பரப்ப வேண்டும். ஆனால், அதற்கு ஆபத்து ஏற்படும் வகையில் நவோதயா பள்ளி போன்ற திட்டங்களை ஏற்கக் கூடாது. இல்லாவிட்டால் மக்கள் புரட்சி அதிகமாகிவிடும். இனிமேலாவது சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார் வீரமணி.