அதிமுகவை ஒன்று சேர்க்கவும், பலப்படுத்தவும் யார் இணைந்தாலும் அதனை வரவேற்கலாம் என, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்த ஏ.சி.சண்முகம், 6 மாதங்களுக்குள் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி
தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக தொடர்ந்து சிறப்பாக இயங்க வேண்டும். இரட்டை இலைச் சின்னத்தைப் பெற பிரிந்திருந்தவர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அதிமுகவை ஒன்று சேர்க்கவும், பலப்படுத்தவும் யார் இணைந்தாலும் அதனை வரவேற்க வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் அதிமுக சிதைந்து விடக்கூடாது என்றார் அவர்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன்னுரங்கம் உடனிருந்தார்.