தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது : தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. கடந்தாண்டு சம்பா சாகுபடியும் பாதித்தது.
கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 110 டிஎம்சி தண்ணீரில் 30 டிஎம்சி மட்டுமே நிகழாண்டில் தந்துள்ளது. ஆனால், கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. எனவே, மீதமுள்ள 90 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் தாய்மொழிக் கல்விக்குத்தான் தமாகா முதலிடம் கொடுக்கும். அடுத்து தொடர்பு மொழியான ஆங்கிலம், 3-ஆவது விருப்ப மொழி. இந்த அடிப்படையில்தான் கல்வி வழங்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட மொழியை திணிக்கவோ, கட்டாயமாக்கவோ கூடாது. நவோதயா பள்ளிகள் திறந்தாலும் அதில் தமிழ்மொழிக்கு தடை இருக்கக் கூடாது. அதிமுக பிரச்னைக்கு நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும்தான் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தேர்தல் வந்தால் கூட்டணி குறித்து தொண்டர்களின் மனநிலைப்படி முடிவு எடுக்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு நல்லமுறையில் பேசி, அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார் அவர்.