சென்னை: வழக்கு விசாரணைகளின் போது தேவையில்லாமல் வாய்தா வாங்குவதால், நீதித் துறையின் பெரிய நோயாக வாய்தா விளங்குகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்தின் 125வது ஆண்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளில் தேவையில்லாமல் வாய்தா வாங்குவது, நீதித் துறையில் மிகப்பெரிய நோயாக இருக்கிறது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் நகரங்களுக்குச் சென்ற போது அங்கு வேற்றுமையில் ஒற்றுமை இருப்பதைக் கண்டேன். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் கட்டமைப்புகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை இந்த சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதியை எதிர்பார்ப்பவர்களுக்கு நீதிமன்றங்கள் களங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார்.