சேலம் கருங்கல்பட்டி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சலின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த மேனகா என்பவரின் 12 வயது மகள் மகேஸ்வரி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மகேஸ்வரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியதாகத் தெரிகிறது.
பின்னர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்தார்.