தமிழகத்தில் ஆளும் அதிமுகவின் இரு தரப்பினர் இடையே நிலவும் சவால் விடும் போக்கால் தமிழக அரசியலில் பதற்றமான சூழல் நிலவுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்த தொல்.திருமாவளவன் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் பலவீனம் சாதிய, மதவாத சக்திகளுக்கு பலமாக மாறிவிடக் கூடாது என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவுக்குள் நடைபெறும் உள்கட்சிப் பூசல் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வருகிறது. இதனால், அந்தக் கட்சிக்கு மட்டும் பாதிப்பல்ல. தமிழகத்துக்கே பாதிப்பாகும்.
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தமிழகம், புதுவையில் போராட்டங்கள் தொடரும் என்றார் திருமாவளவன்.
அப்போது உடனிருந்த முதல்வர் வி.நாராயணசாமி கூறியதாவது: நீட் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்றால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
நீட் தேர்வை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என்று பாஜகவால் தவறான கருத்து பரப்பப்படுகிறது. நீட் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்த பாஜகவின் கனவு அனிதாவின் மரணத்தால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நீட் தகுதித் தேர்வு இல்லாத நிலையைக் கொண்டு வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தகுதித் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றார் அவர்.