பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட கன்டெய்னர் லாரிகள் தமிழக சுமைகளை தமிழகத்திலேயே இறக்கி வருவதால் அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தொழிற்சாலைகளில் இருந்து வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும் கார்கள் மற்றும் கனரக வாகனங்களை சென்னை துறைமுகத்துக்கு எடுத்துச்செல்ல வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட தேசிய அனுமதி பெற்ற கன்டெய்னர் லாரிகளையே தொழிற்சாலை நிர்வாகத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
தேசிய அனுமதி பெற்ற, வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்திலேயே சுமைகளை ஏற்றி, தமிழகத்திலேயே சுமைகளை இறக்கினால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை தமிழக போக்குவரத்துத் துறைக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் தமிழகத்திலேயே பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான, வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட தேசிய அனுமதி பெற்ற கனரக வாகனங்கள் அவ்வாறு வரி செலுத்துவதில்லை. இதனால் தமிழக அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறைக்கு வரி செலுத்துவதில்லை. மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கும் வெளி மாநில கன்டெய்னர் லாரி ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும், வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முடியாமல் உள்ளதாலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்றார்.