புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் (குடும்ப அட்டை) ஏராளமான குளறுபடிகள், தவறான பதிவேற்றம் காரணமாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், குடும்பத் தலைவரின் உருவப்படத்துக்குப் பதிலாக ஒற்றை கால் செருப்புடன் கூடிய படம் அச்சிடப்பட்டு அட்டை விநியோகம் செய்துள்ள விநோதம், பாப்பிரெட்டிப்பட்டி மணியாம்பாடியில் நிகழ்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மணியாம்பாடியைச் சேர்ந்தவர் மகேஷ் சின்னசாமி. இவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது உருவப்படத்துக்குப் பதிலாக செருப்புப் படம் பதிவேற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அந்த அட்டையை பயன்பாட்டுக்கு அவரிடம் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பார்வதி கூறுகையில், ஸ்மார்ட் கார்டு பதிவில் புகைப்படம் தவறாகப் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக குடும்பத் தலைவரான மகேஷ் சின்னசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ஒரு புகைப்படம் பெற்று தவறாகப் பதிவாகியுள்ள புகைப்படத்தை திருத்தம் செய்து புதியதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.