எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறுக்குவழியில் எடுத்த நடவடிக்கை: வெற்றிவேல் பேட்டி

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பது, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பழனிசாமி அரசு குறுக்குவழியில் எடுத்த நடவடிக்கை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறுக்குவழியில் எடுத்த நடவடிக்கை: வெற்றிவேல் பேட்டி

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பது, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பழனிசாமி அரசு குறுக்குவழியில் எடுத்த நடவடிக்கை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவும், தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்தவருமான வெற்றிவேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் செய்யும் அநியாயங்கள் இதெல்லாம், தகுதி நீக்கம் அதன் உச்சம். தகுதி நீக்கத்தை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் செல்லுவோம். நீதிமன்றத்தில் முறையீடு செய்கிறோம் என்று தெரிவித்தார்.

எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் கூண்டோடு தகுதி நீக்கம் செய்தது எவ்வளவு பெரிய அநியாயம். ஆளுநரை சந்தித்து மனு தானே கொடுத்தோம். அவைக்குள் நுழைந்து அராஜகம் செய்தோமா? நாங்கள் கட்சிக்கு எதிராக எதையும் கூறவில்லை என்று கூறினார்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது சட்டப்படி செல்லுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சட்டப்படி செல்லுமா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். எங்கள் தரப்பைக் கேட்டால், தகுதி நீக்கம் செல்லாது என்றே சொல்லுவோம் என வெற்றிவேல் பதில் அளித்தார்.

சபாநாயகரின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது. அரசுக் கொறடா உத்தரவு சட்டப்பேரவைக்குள் மட்டுமே செல்லும் என்றும் வெற்றிவேல் கூறியுள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட 19 எம்எல்ஏக்கள் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

முதல்வருக்கு எதிராக மனு கொடுத்தது குறித்து செப்டம்பர் 15ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி 19 எம்எல்ஏக்களுக்கும் அவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், எம்எல்ஏ ஜக்கையன்  மட்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி, முதல்வருக்கு எதிராக மனு கொடுத்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறி விளக்கம் அளித்தார்.

சபாநாயகர் அளித்த காலக்கெடுவுக்குள் நேரில் விளக்கம் அளிக்கத் தவறிய 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி, சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர், அவைத் தலைவர் தனபாலுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com