சென்னை: வெளியில் நடந்த சம்பவங்களுக்காக ஒரு சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அதில், சட்டப்பேரவைக்கு உள்ளே தீர்மானம் கொண்டுவந்து அல்லது கொறடா உத்தரவிட்டு அதை மீறாத சூழ்நிலையில், வெளியில் நடந்த சம்பவங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய முடியாது.
நான் வழக்குரைஞர் என்ற ரீதியிலும், முன்னாள் துணை சபாநாயகர் என்ற முறையிலும், ஒரு கட்சியை நடத்தியிருக்கும் அனுபவத்திலும் என் கருத்தாக இதனை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இதற்கு மேல் நீதிமன்றம் தலையிட வாய்ப்பு இருக்கிறது. சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றம் போவது குறித்து முடிவு செய்தால் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.