தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை தற்போது கேரளம், கடலோர கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை, வளிமண்டலத்தின் மேலடுக்கில் காற்றின் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றார் அவர்.
தேவாலாவில் 110 மி.மீ...: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 110 மி.மீ. மழை பதிவானது. கோவை மாவட்டம் வால்பாறையில் 90 மி.மீ., பெரம்பலூர் மாவட்டம் பாடலூர், செட்டிகுளத்தில் 60 மி.மீ. பதிவானது. தேனி மாவட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கூடலூர் பஜாரில் 50 மி.மீ., அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் 40 மி.மீ. பதிவானது. 10 மி.மீ. முதல் 30 மி.மீ. வரை 25-க்கும் அதிகமான இடங்களில் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com