பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோது, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மக்களிடம் மத்திய அரசு கொள்ளையடிக்கிறது. இது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதார தீவிரவாதத் தாக்குதல் என பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
ஆனால், இன்று பாஜக ஆட்சியின் தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ. 73.09 என்ற அளவிலும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.62.02 என்ற அளவிலும் உயர்ந்திருக்கிறது. இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அடித்தட்டு மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் இந்த விலை உயர்வை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த, தினசரி விலை உயர்வுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அதை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலைக்குறைப்பின் பயன்கள் சாதாரண மக்களுக்குச் சென்றடையவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.