அழகிரியின் திறமை ஸ்டாலினுக்கு இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் தெற்கு தொகுதி அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா ஓபுளாபடித்துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் செல்லூர் ராஜூ பேசுகையில்,
தமிழகத்தில் பொதுவுடைமை மற்றும் சமூக நீதிக்கு வித்திட்டவர்கள் பெரியாரும், அறிஞர் அண்ணாவும். அறிஞர் அண்ணாவின் வரலாறு இளைஞர்களுக்கு ஒரு பாடம். திறமை மற்றும் தெளிவு இருந்தால் வாழ்வில் உயரலாம் என்பதற்கு அண்ணா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சாவி கொடுத்தால் செயல்படும் பொம்மை போன்றவர். அவரால் சுயமாக செயல்பட முடியாது.
கருணாநிதியின் அனைத்து திறன்களையும் பெற்றவர் மு.க. அழகிரி மட்டுமே. ஸ்டாலினுக்கு அந்த திறமை இல்லை. திமுக ஒரு அஸ்தமனமான கட்சி, அது மீண்டும் வளராது என்றார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், வி.வி. ராஜன் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.