சென்னை: வருடா வருடம் நவராத்திரி கொலு பூஜைக்கான பொம்மைகள் விற்பனையில் சென்னையில் இந்த வருட ஸ்பெஷலாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொம்மை இடம்பெற்றுள்ளது.
ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் சிறப்புகளில் ஒன்றாக வீட்டில் கொலு வைக்கும் நிகழ்வு உள்ளது. கொலு பூஜை என்பது தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை மிகப்பிரபலமாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு வருடமும் இந்த கொலு சீசனில் அப்போது புகழ்பெற்ற விதவிதமான கொலு பொம்மைகள் அலங்கரித்து இடம்பெறுவது வழக்கம். உதாரணமாக கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆன போது 'பாகுபலி பொம்மைகள்' கொலுவில் இடம்பெற்றன.
அந்த வகையில் இந்த வருடம் கொலு பூஜைக்கான பொம்மைகள் விற்பனையில் நடுநாயகமாக அலங்கரிக்கும் பொம்மை எது தெரியுமா? அது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொம்மைதான்.
கொலு பூஜை பொம்மை விற்பனையில் ஜெயலலிதாவின் உருவ பொம்மைகள் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.