சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சேலத்தில் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி மணிமேகலை (27). இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
மணிமேகலை மீண்டும் கருத்தரித்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதியருக்குள் பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதையடுத்து மணிமேகலைக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு மணிமேகலையின் உறவினர் யாரும் வரவில்லை. இதனால், அந்த மருத்துவமனையில் பணியாற்றிய அவர் பெயரையே கொண்ட மணிமேகலை என்ற ஊழியர் அவருக்கு தேவையான உதவிகளைச் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, தங்கள் குடும்ப விஷயங்களையும் பறிமாறிக் கொண்டுள்ளனர்.
அப்போது தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், முதல் குழந்தையை வளர்க்கவே பொருளாதாரம் இல்லாத சூழலில் இரண்டாவது குழந்தையையும் வளர்ப்பது கடினம் என்று மணிமேகலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மருத்துவமனை ஊழியர் மணிமேகலை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்து வந்துள்ளார். இருவரும் வாடகைக் காரில், அண்மையில் பிறந்த பச்சிளங்குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு வந்ததும், உடல் பரிசோதனை செய்து கொண்டால்தான் வேலை கொடுப்பார்கள் என்று கூறி குழந்தையின் தாயை முழு உடல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார். குழந்தையை ஊழியர் மணிமேகலையிடம் விட்டு விட்டு தாய் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து வெளியே வந்தபோது அந்தப் பெண் குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையை மீட்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சேலத்தில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை பூக்கடை போலீசார் சேலம் சென்று மீட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக மணிமேகலை உட்பட 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.