பழனி: பழனி அருகே ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில் குடும்பத் தலைவரின் படத்திற்கு பதில் தேசியக் கொடியின் படம் இடம் பெற்றிருந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பழனி அருகே உள்ள ஆயக்குடி ஓபுலாபுரம் ஒட்டர்தெருவைச் சேர்ந்தவர் சுல்தான் காதர் ராவுத்தர். இவருக்கு சமீபத்தில் தமிழக அரசின் குடிமைப் பொருள் பிரிவு சார்பில் ஸ்மார்ட் ரேசன் கார்ட் வழங்கப்பட்டது. அதில் குடும்பத் தலைவராக அவரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் நமது தேசிய கொடியின் படம் இடம் பெற்றிருந்தது.
இதைப்பார்த்ததும் சுல்தான் காதர் ராவுத்தர் அதிர்ச்சியடைந்தார். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள ஸ்மாரட் ரேசன் கார்டுகளில் குடும்பத் தலைவர்களின் புகைப்படங்கள் தவறாக இடம் பெற்று வருகின்றன.
குறிப்பாக முதலில் நடிகை காஜல் அகர்வால், விநாயகர் கடவுள் படம் ஆகியவை இடம் பெற்றிருந்தது. தற்பொழுது அந்த வரிசையில் குடும்பத் தலைவரின் புகைப்படத்துக்கு பதிலாக தேசிய கொடியின் படம் இடம்பெற்று இருப்பது மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.