சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, தமிழக மக்களின் மனசாட்சிக்கு எதிரான நடவடிக்கை என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:அதிமுக இரண்டு அணியாக செயல்பட்டு வரும் நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு நிலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை, சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும், உள்கட்சி பிரச்னை காரணமாக முதல்வருக்கு எதிராக செயல்பட்டனரே தவிர, அவர்கள் கட்சி மாறவில்லை என்பதை சட்டப்பேரவைத் தலைவர் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப். 20-ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் பொறுமை காத்திராமல், 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கும், மக்கள் மனசாட்சிக்கும் எதிரானது. இதற்கு நீதிமன்றம் சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.