சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இளமாறன் உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து திருமுருகன் உள்பட நான்கு பேர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சென்னை மெரீனாவில் கடந்த மே மாதம் 21 - ஆம் தேதி, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து மே 17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறை அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 30 - க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் திருமுருகன் காந்தி, இளமாறன், அருண், டைசன் ஆகிய நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய, மாநகர காவல்துறை ஆணையர் மே 28 - ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்ய கோரி, திருமுருகன் உள்பட நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர், புழல் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் மனுக்களை ஆய்வு செய்தது.
இந்த நிலையில், திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.