எம்.எல்.ஏ. பழனியப்பனுக்கு முன்ஜாமீன்

நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்ரமணியனை தற்கொலைக்குத் தூண்டியதாகத் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன், ஒப்பந்ததாரர்

நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்ரமணியனை தற்கொலைக்குத் தூண்டியதாகத் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன், ஒப்பந்ததாரர் தென்னரசு ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் கடந்த மே 8-இல் மோகனூர் அருகே பண்ணை வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. 
சுப்ரமணியன் எழுதிய கடிதத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ பழனியப்பனின் பெயர் இருந்ததாம். 
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியபோது பழனியப்பன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். ஆனால் இரண்டாவது முறையாக அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால் அவரை போலீஸார் தேடி வந்தனர். அவரை தமிழக போலீஸார் கர்நாடக மாநிலம் குடகிற்குச் சென்று தேடினர். இந்த வழக்கில் தென்னரசு என்ற ஒப்பந்ததாரரையும் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் கோரி பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத்தான் இறந்தார். ஆனால் இந்த வழக்கில் , போலீஸார் தேவையின்றி தனது பெயரையும் சேர்த்து தேடி வருகின்றனர் என தெரிவித்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்ததாரர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு ஒப்பந்ததாரரான தென்னரசு ஆகியோர் தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com