மூழ்கும் கப்பலான தமிழக அரசுக்கு உதவி செய்யவே, தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் தமிழக சட்டப் பேரவைத் தலைவரின் முடிவானது, அப்பட்டமான பாரபட்சமான செயலாகும். மைனாரிட்டி தமிழக அரசுக்கு உதவி செய்யவே இதை அவர் செய்துள்ளார். மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது.
முடங்கியுள்ள தமிழக அரசுக்கு மெஜாரிட்டி பலத்தை உருவாக்கவே, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அபத்தம் நிறைந்த திரையரங்காக தமிழகம் காட்சியளிக்கிறது.
தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், கட்டுப்பாட்டுடன் நடக்கும்படி சட்டப் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், அவரோ நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக அரசியல் களமானது, துயரத்துடன் கூடிய காமெடி களமாகிவிட்டது என்று அந்தப் பதிவுகளில் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி திங்கள்கிழமை கருத்து தெரிவித்தபோது, கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ், 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான முடிவை சட்டப் பேரவைத் தலைவரும், ஆளுநரும் எடுப்பதற்கு ஏன் காலதாமதமானது? என்று கேள்வியெழுப்பியிருந்தார். இந்த முடிவை எதிர்த்து, நீதிமன்றத்துக்கு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அரசியல் நிலவரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஆனால், பிற கட்சிகள் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்பதனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு வருவதாகவும் சிங்வி தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை சட்டப் பேரவைத் தலைவர் தனபால் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, 8 பேரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.