ஹெச். ராஜாவுக்கு ஏற்பட்ட தோல்விதான் தமிழகத்தில் பாஜகவுக்கும் நேரிடும்: உளவுத்துறை எச்சரிக்கை

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான்

சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான் பாஜகவுக்கும் ஏற்படும் என தில்லி தலைமைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை அறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் சனிக்கிழமை (செப்.16) காலை 10.30 மணி அளவில் தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர். இதையடுத்து சனிக்கிழமை பிற்பகலில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநர் மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 46 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதையடுத்து ஹெச்.ராசா தோல்வியடைந்தது குறித்து மத்திய உளவுத்துறை தீவிரமாக ஆய்வு செய்துள்ளது. அதில், ஹெச். ராஜா தோற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். இதேபோன்று வரும் 2019 மக்களவை தேர்தல் மற்றும் இதர தேர்தல்களிலும் பாஜகவுக்கும் இதே அளவிலான தோல்விதான் கிடைக்கும் என தில்லி தலைமைக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், மாநிலம் முழுவதுமே அனைதத்து தரப்பினரிடையேயும் பாஜகவுக்கு எதிரான தோற்றமே உருவாகியுள்ளது. இந்தத் தோல்வியும் அதைத்தான் காட்டுகிறது எனக் குறிப்பிட்டு காட்டியுள்ளனர்.

இந்த அறிக்கையை மையமாக வைத்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தனது பார்வையை தமிழகத்தின் மீது செலுத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com