தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், சென்னையில் நடிகர் கமல் ஹாசனை வியாழக்கிழமை சந்தித்து பேச உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத பிரமுகர் ஒருவர் தில்லியில் புதன்கிழமை கூறியதாவது:
அரவிந்த் கேஜரிவால் சென்னைக்கு வியாழக்கிழமை செல்கிறார். அங்கு நடிகர் கமல் ஹாசனை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். அரசியல் சம்பந்தமாக இருவரும் கலந்துரையாடுவார்கள் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையத்தையும் கேஜரிவால் பார்வையிட உள்ளார் என்று அந்தப் பிரமுகர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுவருவதாக கமல் ஹாசன் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
கேரளத்தில் வெற்றிகரமாக ஓராண்டு ஆட்சியை கடந்த மே மாதம் நிறைவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசையும் அவர் பாராட்டினார்.
கமல் ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவும் வாய்ப்பிருப்பதாக ஊகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கேஜரிவால் அவரை சந்தித்து பேசவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.