தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் தமிழக அரசு சார்ப்பில் அறிவிப்பு வெளியானது.
இதனால் வாகன ஓட்டிகள் இடையே குழப்பம் நிலவியது. மேலும், அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்தால் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், வாடகை வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை முதலாளிகளிடம் ஒப்படைத்த பின்னர் தான் வாகனத்தை ஓட்ட முடியும் என்ற சூழ்நிலையும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அசல் உரிமம் தொலைந்துபோனால் அதற்கு மாற்று உரிமம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் நிலையும் உருவானது.
இதனால், ஓட்டுநர் உரிமம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில், அசல் ஓட்டுநர் உரிமத்தை மறந்து வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது. அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு மட்டும் 3 மாதம் சிறைத் தண்டனை கட்டாயம். மறதியைக் குற்றமாகக் கருத இயலாது என்று உத்தரவிடப்பட்டது.
நகல் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு வெளிநாடு செல்ல இயலாது. அசல் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதுபோல வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் தேவை. இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.