வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வருமானவரித்துறை அதிகாரி, எம்எல்ஏ தம்பதி மீது சிபிஐ வழக்குப்பதிவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிபிஐ அதிரடி. எம்.எல்ஏ மற்றும் அவரது மனைவி மீது விசாரணை.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வருமானவரித்துறை அதிகாரி, எம்எல்ஏ தம்பதி மீது சிபிஐ வழக்குப்பதிவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரி டி.ஹெச்.விஜயலட்சுமி மற்றும் அவரது கணவரும் முன்னாள் ரயில்வேத்துறை தணிக்கை அதிகாரியும், தற்போதைய ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வுமான ஏ.சுரேஷ் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

டி.ஹெச்.விஜயலட்சுமி, 1994-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் ஐ.ஆர்.எஸ் முடித்து வருமானவரித்துறை உதவி ஆணையராக ஏப்ரல் 25, 1994-ல் பணியில் இணைந்தார்.

பெங்களூரு, ராய்ச்சூர், கர்ணூல், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குப் பிறகு தற்போது சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார்.

இவரது கணவர் ஏ.சுரேஷ், ரயில்வேத்துறையில் மூத்த கணக்குத் தணிக்கை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர் அரசியலில் களம் கண்டார்.

முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2009-ம் ஆண்டு எர்ரகொண்டபல்லம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். பின்னர் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதே தொகுதிக்கு 2014-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்கிறார்.

இந்நிலையில், இவர்கள் இருவரின் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சிபிஐ-க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சோதனை மேற்கொண்ட சிபிஐ, ஏப்ரல் 1, 2010 முதல் பிப்ரவரி 29, 2016 வரை இந்த தம்பதியின் மொத்த வருமானம் ரூ. 4.84 கோடியாக இருந்தது. ஆனால், ரூ. 5.95 கோடிக்கு சொத்து சேர்த்தது கண்டுபிடித்தனர்.

எனவே, வருமானத்துக்கும் அதிகமாக ரூ. 1.10 கோடிக்கு (மொத்த வருமானத்தில் இருந்து 22.86 சதவீதம் கூடுதலாக) சொத்து சேர்த்து தொடர்பாக இவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com