கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கீழடியில் 4 -ஆவது கட்ட அகழ்வாராய்ச்சிக்கு காலம் தாழ்த்தாமல் மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கீழடியில் 4 -ஆவது கட்ட அகழ்வாராய்ச்சிக்கு காலம் தாழ்த்தாமல் மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழமை வாய்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற உத்தரவிட வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் கனிமொழிமதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு தொடர்பாக உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் அண்மையில் கீழடிக்குச்சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் கனிமொழி மதி, கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் வரும் 30 -ஆம் தேதி முடிவடைய உள்ளது. எனவே 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கு காலம் தாழ்த்தாமல் தொடங்க உத்தரவிடவேண்டும் என்று வாதிட்டார். அப்போது தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ ராமன், 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி விரைவில் தொடங்கி விடும். அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு மத்திய தொல்லியல் துறை காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்க வேண்டும். மேலும் அகழ்வாராய்ச்சிப் பணியில் மாநில அரசும் இணைந்து செயல்பட அனுமதி கோரி மனு செய்தால் அவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர். 
மேலும் கீழடியில் இதர நிலங்களிலும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அகழ்வாராய்ச்சி நடைபெற உத்தேசித்துள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு மனு மீதான உத்தரவுக்காக விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com