சென்னை: டிடிவி தினகரன் அணியில் இருந்த தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை அளித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக மக்களுக்காகத்தான் இயங்கும். நாட்டில் நடப்பதை மக்களும், அதிமுக தொண்டர்களும் பார்த்துக் கொண்டுள்ளனர். அதிமுகவை யாராலும் அழித்துவிட முடியாது என்று ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஆட்சி செய்து வருகிறார்கள் என்றார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் கலைத்து விடுவேன் என்று டிடிவி தினகரன் கூறியதால் அவரிடம் இருந்து வெளியேறி முதல்வர் அணிக்கு மாறிவிட்டேன். இபிஎஸ், ஓபிஎஸ் உடன் இணைந்து இனிமேல் பணியாற்றுவேன். எம்எல்ஏக்கள், மக்களுக்காக பணியாற்றாமல் குடகில் தங்கியுள்ளனர்.
திமுகவுடன் கூட்டு சேர்ந்து டிடிவி தினகரன், அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று சொல்வதா? தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தினகரனால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் வசந்தி முருகேசன் கூறியுள்ளார்.